மேற்கு வங்கத்தை சிதைத்து அடையாளத்தை மாற்ற நினைக்கும் பாஜக! திரிணமூல்
பாஜக வெளியிட்ட பதிவுக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி...
மேற்கு வங்கத்தை சிதைத்து அதன் அடையாளத்தையே மாற்ற பாஜக நினைப்பதாக திரிணமூல் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு நாளை (ஏப். 29) வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
Advertisement
இந்த நிலையில், தில்லி பாஜக எக்ஸ் பக்கத்தில், முதல்வர் பதவியிலிருந்து மே 4 ஆம் தேதி மமதா பானர்ஜி வெளியேறுவது போன்ற சித்திரத்தை பகிர்ந்துள்ளனர். அதிலுள்ள பெயர் பலகையில் “வங்கமே விடைபெறுகிறேன்” (Bengal Good Bye) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த படத்தை பகிர்ந்த திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தின் கலாசாரம் மற்றும் மொழிக்கு விடுக்கப்பட்ட ஒரு வெளிப்படையான மிரட்டல் என்று குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"மாற்றம் வேண்டும் என்ற கோஷத்துடன் வங்கத்துக்குள் பாஜக வந்தது. தற்போது வெளிப்படையாக ’வங்கமே குட் பை’ என்கிறார்கள். மேற்கு வங்கம் எதற்காக நிற்கிறதோ, அதையெல்லாம் அழித்துவிடுவோம் என்று பகிரங்கமான மிரட்டல் விடுகின்றனர்.
வங்கமே, விடைபெறுகிறேன் என்பதன் உண்மையான அர்த்தம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வங்கத்தின் கலாசாரம், மொழி, சின்னங்கள், வரலாறு, இலக்கியம், பாரம்பரியம், உணவு என அனைத்துக்கும் விடைகொடுக்க பாஜக விரும்புகிறது.
பாஜக வங்கத்தை ஆள விரும்பவில்லை, சிதைக்க விரும்புகிறார்கள். நமது ஆணிவேரையே மாற்ற விரும்புகிறார்கள். நமது தனித்துவ அடையாளத்தை ஆன்மாவை ஒற்றை வடிவத்துக்கு மாற்ற விரும்புகிறார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் மாட்டோம். வங்க மக்களே பாஜக நமது அடையாளத்தை அழிக்க அனுமதிக்காதீர்கள். உறுதியாக நில்லுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.