ஆம் ஆத்மியைத் தொடர்ந்து! 20 திரிணமூல் எம்பிக்கள் கட்சி மாற திட்டம்! - பாஜக மூத்த தலைவர் பேச்சு!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்...
மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் தகவல் “போலியானது” எனக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் மூலம் மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சுமார் 29 மக்களவை இடங்களையும், பாஜக 12 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவருமான சௌமித்ரா கான், “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், பாஜக விரும்பினால் அடுத்த சில நாள்களில் ஒட்டுமொத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் காணாமல் போய்விடும் என அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நாட்டின் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் கட்சி மாற வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 19 முதல் 20 மக்களவை உறுப்பினர்கள் ஒன்றாகக் கட்சி மாற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, சௌமித்ரா கான் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகதா ராய், இது முற்றிலும் போலியான தகவல் எனவும், சௌமித்ரா கான் செய்தியாளர்களிடம் தவறான செய்திகளைப் பரப்புகிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர். ஆனால், அந்தத் தேர்தலில் தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மமதா பானர்ஜி முதல்வரானார். இதனால், அவர்கள் அனைவரும் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.