மக்களவையிலும் உடைகிறதா மமதாவின் திரிணமூல் காங்.?
திரிணமூல் காங்கிரஸ் மக்களவையிலும் இரண்டு அணிகளாகப் பிரிவதாகத் தகவல்...
மக்களவையில், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 அணிகளாகப் பிரிவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்தது முதல் அக்கட்சிக்குள் பல்வேறு கிளர்ச்சிகள் உருவாகி வருகின்றன.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் 80 இடங்களைக் கைப்பற்றியிருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 58 உறுப்பினர்கள் மமதாவுக்கு எதிராக அணிசேர்ந்து தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என அறிவித்துக்கொண்டனர்.
Advertisement
Advertisement
மேலும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ரிதப்ரதா பந்தோபாத்யாய் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், பெரும்பான்மையை இழந்து மமதா ஆதரவு அணி சிறுகுழுவாக மாறியுள்ளது.
இதேபோல், நாடாளுமன்றத்திலும் மமதாவின் திரிணமூல் காங்கிரஸ் விரைவில் 2 வெவ்வேறு அணிகளாகப் பிரியும் எனவும், மூத்த தலைவர் ஒருவரின் தலைமையில் இந்த அணி உருவாகும் எனவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுங்கட்சியான பாஜகவின் சூழ்ச்சியால் திரிணமூல் காங்கிரஸ் 2 அணிகளாக உடைக்கப்படுவதாகவும்; இதனால்தான் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மாநில தலைவர் ஆகியோர் தில்லிக்கு அழைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசியலமைப்பின்படி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படாமல் தவிர்க்க, ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் ஒன்றாக அணிசேர வேண்டும்.
இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மமதாவுக்கு எதிரான அணியில், 20-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குப் பிறகு அதிக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் திகழ்கிறது.
28 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 20-க்கும் அதிகமான உறுப்பினர்கள் விரைவில் பாஜகவில் இணையவார்கள் என பாஜக மூத்த தலைவர் சௌமித்ரா கான் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.