மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி ஆட்சியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலையை பாஜக அரசு அகற்றியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி ஆட்சியில் சால்ட் லேக் மைதானத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பிரபலமான ’விவேகானந்தர் யுப பாரதி கிரிரங்கன்’ எனப்படும் சால்ட் லேக் மைதானம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி ஆட்சியில் சால்ட் லேக் மைதானத்தை 2017 ஆம் ஆண்டு புனரமைத்த போது, விவிஐபி நுழைவு வாயிலில் கால்பந்து வீரரின் கால்களைப் போன்ற சிலை ஒன்று நிறுவப்பட்டது. இச்சிலையின் வடிவமைப்பை மமதா பானர்ஜியே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
சிலை நிறுவப்பட்டது முதல் பலரால் இது விமர்சிக்கப்பட்ட நிலையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு அந்தச் சிலையை அகற்றியுள்ளது.
Advertisement
Advertisement
மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் நிசித் பிரமானிக் கடந்த மே 17 அன்று டெர்பி போட்டியைக் காண இந்த மைதானத்திற்கு வந்தார். அப்போது, இச்சிலை பற்றி விமர்சித்த அவர், “துண்டிக்கப்பட்ட கால்களின் மேல் ஒரு கால்பந்து வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற விசித்திரமான மற்றும் மோசமான தோற்றம் கொண்ட சிலை இது. இந்தச் சிலை நிறுவப்பட்டது முதலே மமதா பானர்ஜி ஆட்சிக்குச் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியதாகப் பலரும் நம்பினர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையுடன் ஆலோசித்து சிலையை அகற்ற முடிவெடுத்ததாக விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “சால்ட் லேக் மைதானம் என்பது கால்பது விளையாட்டின் ரசிகர்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான இடமாகும். மைதானத்திற்கு வெளியே அழகியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விளையாட்டு அடையாளச் சின்னத்தை உருவாக்கும் நோக்கத்தில் பழைய சிலை அகற்றப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலை அகற்றப்பட்ட இடத்தில் இந்தியாவின் பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவரது சிலை வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.
BJP Government Removes Statue Erected by Mamata Banerjee in West Bengal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.