FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மமதாவிடம் இருந்து திரிணமூலை கைப்பற்றும் ரிதப்ரதா பானர்ஜி! யார் இவர்?

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ரிதப்ரதா பானர்ஜி பற்றி...

15 ஜூன் 2026, 3:46 pm IST
ரிதப்ரதா பானர்ஜி - ANI
பகிர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்ஜியின் செல்லப்பிள்ளையாக இருந்த ரிதப்ரதா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியின் எதிரியாக மாறியுள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 15 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று பெருந்தோல்வியைச் சந்தித்தது.

பாரதிய ஜனதா கட்சி 207 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சோபன்தேவ் சட்டோபாத்யாயவுக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.

அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தனக்கு கட்சியின் 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேரின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து, சட்டப்பேரவைத் தலைவர் ரதீந்திர போஸிடம் கடிதத்தை ரிதப்ரதா பானர்ஜி வழங்கினார்.

இதையடுத்து, அவரை திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜியை அங்கீகரித்து ரதீந்திர போஸ் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதன்மூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முழு அதிகாரமும் ரிதப்ரதா பானர்ஜியிடம் சென்றுள்ளது. இது மமதா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கட்சியின் முழு அதிகாரத்தையும் ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புத்ததேவின் செல்லப்பிள்ளை டூ மமதாவின் எதிரி

தற்போது 46 வயதாகும் ரிதப்ரதா பானர்ஜி, தனது அரசியல் வாழ்க்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துதான் தொடங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்த ரிதப்ரதா பானர்ஜி, 35 வயதில் மாநிலங்களவை உறுப்பினரானார்.

ஆனால், ஆப்பிள் வாட்ச், மான்ட் பிளாங்க் பேனா போன்ற விலை உயர்ந்த பொருள்களுடன் வலம்வந்த ரிதப்ரதா, கட்சிக்குள் கோஷ்டி மோதல், மூத்த தலைவர்கள பொதுவெளியில் விமர்சிப்பது போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.

தொடர்ந்து, கட்சி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல், ஆடம்பர வாழ்க்கை முறைக்கு மாறிய காரணத்துக்காக, மூன்றே ஆண்டுகளில் அவரின் மாநிலங்களவை பதவி பறிக்கப்பட்டது. பின்னர், 2017 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

2017 -ல் பாஜகவில் இருந்து முகுல் ராய், கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்ட தலைவர்களுடன் மிக நெருக்கமாக பயணித்த ரிதப்ரதா, ஒரு பெண் தொடர்பான வழக்கிற்கு பிறகு திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

அப்போதைய மேற்கு வங்க முதல்வர் மமதாவின் நலத்திட்டங்களை, விளாதிமிர் லெனினின் கம்யூனிசக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு ரிதப்ரதா பேசியது சர்ச்சையானது.

மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் நம்பிக்கையைப் பெற்ற ரிதப்ரதா, 2020 ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திரிணமூல் காங்கிரஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திரிணமூல் காங்கிரஸின் தொழிற்சங்கப் பொறுப்பாளரானார்.

அவரது மாநிலங்களவை பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

இவ்வாறு சித்தாந்த எல்லைகளைக் கடந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திரிணமூல் காங்கிரஸுக்குச் சென்ற ரிதப்ரதா, தற்போது அந்தக் கட்சியையே கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது அரசியல் சாகசம் என்றே கூறலாம்.

அவரின் முயற்சியில் முழுமையாக வெற்றி பெறுவாரா? அல்லது தோல்வியடைவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

summary

Ritabrata Banerjee Set to Seize Trinamool from Mamata - Who Is He?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments