திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் தொண்டர் ஒருவரை மமதா பானர்ஜி கன்னத்தில் அறைந்தது குறித்து...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர் ஒருவரை அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி கன்னத்தில் அறைந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் பர்பூரி பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவரணி சார்பில் இன்று (ஜூலை 8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்கத்தாவில் மமதா பானர்ஜி இல்லம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்த மமதா பானர்ஜி கூட்டத்திற்குள் புகுந்து கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
படுகாயம் அடைந்தவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிக்கொண்டிருந்தபோது, கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூட்டத்தை மமதா பானர்ஜியை நெருங்கவிடாமல் ஆவேசமாகத் தடுத்த தனது கட்சியை சேர்ந்தவரை கன்னத்தில் அறைந்தார்.
அங்கிருந்த பலரும் அந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை விடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, மமதா தனது கட்சித் தொண்டரையே கன்னத்தில் அறைந்ததும் பதிவாகியுள்ளது. இந்த விடியோ குறித்து திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
எனினும், அமைதியாக நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் புகுந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார். தனது கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சுத் தாக்குதலை நடத்தி கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது பாஜகதான் எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.
ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் இருக்க வேண்டிய காவல் துறையினரும் இல்லை, பாதுகாப்புப் படையினரும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Mamata Banerjee Slaps Her Own Party Worker During TMC Protest In Kolkata
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.