கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி! மமதா பானர்ஜிக்கு பின்னடைவு!!
மமதா பானர்ஜியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
மேற்கு வங்கத்தில் திடீர் திருப்பமாக, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டவரை எதிர்க்கட்சித் தலைவராக அவைத்தலைவர் அங்கீகரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
முதல்வர் வேட்பாளரான மமதா பானர்ஜி, தான் போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார்.
Advertisement
Advertisement
இந்தத் தேர்தலில் 207 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில், மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சோவன்டெப் சட்டோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கும் நிலையில், 60 பேர் தனக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருப்பதாக ரிதாப்ரதா பானர்ஜி அவைத்தலைவருக்கு கடிதம் அளித்திருந்தார்.
அதன்படி, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்ட திரிணமூல் எம்.எல்.ஏ.வான ரிதாப்ரதா பானர்ஜி, தனது 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் கடிதம் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ரிதாப்ரதா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான அங்கீகாரத்தை அவைத் தலைவர் ரதீந்திர போஸ் வழங்கியுள்ளார்.
2018-ல் திரிணாமூல் கட்சியில் இணைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி, கடந்த பேரவைத் தேர்தலில் உலுபேரியா பூர்பா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஜாவேத் கான், சந்திபன் சாஹா, சபினா யாஸ்மின் மற்றும் சியோலி சாஹா ஆகியோர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அக்ருஸ்ஸமான் கட்சியின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் கட்சியின் பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி, சோபன்தேப் சட்டோபாத்யாயை எதிர்க்கட்சித் தலைவராகவும், ஃபிர்ஹாத் ஹக்கீமை தலைமை கொறடாவாகவும் பரிந்துரைத்து அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இருப்பினும், சோபன்தேப்பிற்கு ஆதரவாகப் பல திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கையொப்பங்கள் போலியாகப் போடப்பட்டதாக ரிதாப்ரதா மற்றும் சந்திபன் ஆகியோர் குற்றம் சாட்டினார். இதனால், இந்தக் கடிதத்தை அவைத்தலைவர் ரதீந்திர போஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்தாக ரிதாப்ரதா பானர்ஜி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.