177 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு! பாஜக மீது மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது, பாஜக முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக மமதா தெரிவித்தது பற்றி...
மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது, பாஜக முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வென்று, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் சோனார்பூர் பகுதிக்கு அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை (மே 30) சென்றாா்.
Advertisement
Advertisement
அந்த நேரத்தில், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அபிஷேக் பானர்ஜி மீது முட்டைகள், கற்கள், காலணிகள் போன்வற்றை வீசியும் அவரைக் கையால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர். இதனைக் கண்டித்து மமதா பானர்ஜி இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராணி ரஷ்மோனி சாலையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளைக் கொல்கத்தா காவல்துறை நிராகரித்தது. ஆகவே, எஸ்பிளனேடில் உள்ள 'ஓய் செனல் பகுதியில் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
நமக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இனிமேல் மற்ற அரசியல் கட்சிகள், ஏதேனும் நிகழ்ச்சிகளை நடத்தினால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்.
பாஜக முன்பே, தனது தொண்டர்களை ரகசியமாக அழைத்து வந்து, அவர்களுக்கு உணவளித்து, எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றும் பயிற்சி அளித்திருந்தது.
திரிணமூல் காங்கிரஸைச் சார்ந்த ஒரு தொண்டர் அபிஷேக் பானர்ஜிக்கு தலைக்கவசம் கொடுத்திருக்காவிட்டால், அவர் மீது வீசப்பட்ட கற்கள் அவரை உயிரிழக்கச் செய்திருக்கும்.
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தை சமூக விரோதிகள் மற்றும் புல்டோசர்களை வைத்து அழிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைத்து, மாநிலத்தை இருளில் தள்ளியுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 177 இடங்களில் பாஜக வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்துதான் வெற்றி பெற்றது என்று மமதா பானர்ஜி என்று மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.