மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திக்க உள்ளது குறித்து...
மேற்கு வங்கத்தில், வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மேற்குவங்கத்தில் திரிணமூல் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. இருப்பினும், பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
Advertisement
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் 291 தொகுதியிலும் உள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்களுடனும், வரும் மே 2 ஆம் தேதி காணொளி வாயிலாகச் சந்திக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பில், வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டின் போது, எந்தக் குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பொறுப்புகள் குறித்து, தலைவர்கள் வாக்கு எண்ணும் முகவர்களுக்கு விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் மமதா, தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு இன்று (மே 1) திடீரெனச் சென்றார். அங்கு சுமார் 4 மணி நேரம் இருந்துள்ளார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யவுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அப்படி யாரேனும் செய்ய முயன்றால் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.