பாஜக தலைவரின் உதவியாளர் கொலை: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்!
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை செய்யப்பட்டதுக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனத்தைப் பதிவுசெய்தது குறித்து...
பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுக்கு திரிணமூல் காங்கிரஸ், வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் புதன்கிழமை (மே 6) சுட்டுக்கொல்லப்பட்டார்.
வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“இன்றிரவு, சந்திரநாத் ராத் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதையும், மேலும் மூன்று திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோதிலும், கடந்த மூன்று நாள்களாக பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோதிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இந்த விவகாரத்தில், குற்றவாளிகள் தாமதமின்றி அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், சிபிஐ விசாரணை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனநாயகத்தில் வன்முறைக்கும் அரசியல் படுகொலைகளுக்கும் இடமில்லை. மேலும், குற்றவாளிகள் கூடிய விரைவில் கைது செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.