பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்துகிறது! - காங்கிரஸ்
ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை பாஜக தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது பற்றி...
மேற்கு வங்கத்தில் 20 திரிணமூல் எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தைத் தவறாக பயன்படுத்துவதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) குற்றம் சாட்டினார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள்ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் நேற்று (ஜூன் 8) கடிதம் கொடுத்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் பேசியதாவது:
ஏற்கெனவே, மகாராஷ்டிரத்தில் பாஜக இந்த செயலைச் செய்து முடித்தது. தற்போது, மேற்கு வங்கத்திலும் அதே செயலைச் செய்து முடித்துள்ளனர். ஒருபுறம் ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது.
மறுபுறம் ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு, ஜனநாயக விரோத வழிகளில் எதிர்க்கட்சியை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கிறார்கள். இவையெல்லாம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவையனைத்தையும் கேள்விக்குட்படுத்த வேண்டிய நேரம் வரும். அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார் கே.சி. வேணுகோபால்.