சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!
சுவேந்து அதிகாரியின் உதவியாளரைக் கொன்றவர்கள் மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறாமல் இருக்க, ஏற்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து...
பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரைக் கொன்றவர்கள் மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறாமல் இருக்க அந்த மாநிலத்தின் எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் புதன்கிழமை (மே 6) சுட்டுக்கொல்லப்பட்டார்.
வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள தோஹாரியா பகுதியில் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தின் எல்லைகளில் தீவிர கண்காணிப்பிலும், தேடுதலிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது:
”விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடந்த விதம், வெளி மாநிலங்களிலிருந்து முறையான துப்பாக்கிச்சூட்டு வீரரைத் தேர்ந்தெடுத்ததும் முறையாகத் திட்டமிட்டதைக் காட்டுகிறது.
பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் நிகழ்ந்த பகுதிகளிலிருந்து சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற பாதை, அவர்கள் அந்தப் பகுதிக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதையோ அல்லது உள்ளூர் குற்றவாளிகள் அவர்களுக்கு உதவியிருக்கலாம் என்பதையோ காட்டுகிறது. உள்ளூர் ஆதரவு இல்லாமல், குறுகிய சாலைகள் வழியாக இவ்வளவு விரைவாகத் தப்பிச் செல்வது கடினமாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்தனர்.