மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றது பற்றி..
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று(மே 09) பதவியேற்றுக் கொண்டார்.
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, சுவேந்து அதிகாரிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சுவேந்து அதிகாரி பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், அம்மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.
வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறி வந்தார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டு, அவரே முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பவானிபூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். மேலும், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான திலீப் கோஷ், புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார்.
அத்துடன், பாஜக எம்எல்ஏக்களான அக்னிமித்ரா பால், அசோக் கீர்த்தனியா, நிசித் பிரமாணிக் மற்றும் க்ஷுதிராம் துடு ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
வங்காளத்தில் பாஜகவின் எழுச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாக்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று பதவியேற்றார். ஆயிரக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து, 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கங்களை எழுப்பியவாறு அந்த இடத்தில் திரண்டிருந்தனர்.
BJP legislature party leader Suvendu Adhikari took oath as the chief minister of West Bengal on Saturday, heading the first BJP government in the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.