மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளது பற்றி...
மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என மமதா பானர்ஜி கூறி வருகிறார்.
Advertisement
இதனிடையே நாளை (மே 9) பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக பவானிபூர் தொகுதியில் மமதாவைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரே முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார்.
அக்னி மித்ரா பால் என்பவர் மேற்கு வங்கத்தில் முதல் பெண் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் வடக்கு வங்காளத்தில் இருந்து ஷங்கர் கோஷ் என்பவருக்கும் துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.