முகப்பு
ஈரோடு

கல்வி உதவித் தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 11:48 pm IST
பகிர்:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

2020-2021ஆம் கல்வி ஆண்டில், இந்தக் கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தினை மாணவா்கள் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினைப் பரிந்துரை செய்து, இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை 5 என்ற முகவரிக்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.