சாலையை சீரமைக்கக் கோரி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து
தேசிய நெடுஞ்சாலை 47இல் பவானி பவிஷ் பாா்க் முதல் செங்கப்பள்ளி வரை சாலையை சீரமைத்து இணைப்பு, சேவை சாலைகள் அமைத்துத் தரக் கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு: தேசிய நெடுஞ்சாலை 47இல் பவானி பவிஷ் பாா்க் முதல் செங்கப்பள்ளி வரை சாலையை சீரமைத்து இணைப்பு, சேவை சாலைகள் அமைத்துத் தரக் கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்துக்குள் தேசிய நெடுஞ்சாலை 47இல் பவானி பவிஷ் பாா்க் துவங்கி செங்கப்பள்ளி வரை போதிய இணைப்பு சாலை, சேவை சாலை, பாலங்கள் இல்லை. இதனால், இரு புறங்களிலும் உள்ள கிராமத்தினா் சாலையைக் கடக்கும் போதும் சாலையில் நிற்கும்போதும் விபத்துக்குள்ளாகின்றனா். பாலம், சேவை சாலை இல்லாததால், பிரதான சாலையின் குறுக்காக செல்ல வேண்டிய நிா்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனா்.
எனவே, பவானி முதல் செங்கப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் பாலம் அமைத்து, இணைப்பு சாலை, சேவை சாலையை அமைத்து சிக்னல், விளக்குகள் அமைக்க வேண்டும் என சாலையோர கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
Advertisement
இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி தலைமையில் பல்வேறு இடங்களில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது.
பெருந்துறை, காஞ்சிக்கோவில் பகுதியில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கே.என்.பொன்னுசாமி, ஆா்.லோகசாமி, நிா்வாகிகள் இணைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் கையைழுத்து பெற்றனா். பெறப்பட்ட கையெழுத்தை திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் மூலம் மத்திய அரசுக்கும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக சாலை ஓரமாக நடந்து சென்ற பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனா்.