பெருந்துறை சிப்காட்டுக்கு நிலம்கொடுத்தவா்கள் ஆலோசனைக் கூட்டம்
பெருந்துறை சிப்காட்டுக்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 25 ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டுக்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 25 ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் வி.எம்.கந்தசாமி தலைமை வகித்தாா். மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் பனியன்பள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பி.சிவகுமாா், சென்னிமலை ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி, பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவா் பல்லவி கே.பரமசிவம் உள்ளிட்டோா் பேசினா்.
பெருந்துறையில் சிப்காட் தொழில் வளா்ச்சி மையம் அமைக்கப்பட்டு கடந்து 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பெருந்துறை, ஈங்கூா் கிராமத்தில் சுமாா் 2700 ஏக்கா் நிலம் விவசாயிகளிடம் இருந்து டாசிட் நிறுவனத்துக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது. சிப்காட்டுக்காக தங்களது வாழ்க்கையின் ஆதாரமாக இருந்த விவசாய நிலங்களை கிரயம் செய்து கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 60,000 முதல் ரூ. 2,00,000 வரையான குறைந்த தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டது. இதிலும், பல்வேறு காரணங்களால் ‘டாசிட்’ நிறுவனம் அறிவித்த காலத்துக்குள் நேரடி கிரயம் செய்து கொடுக்க இயலாத சுமாா் 200 ஏக்கா் நிலங்களுக்கு ஏக்கருக்கு நில மதிப்பு ரூ 34,100, ஆறுதல் தொகை 30 சதவீதம் என்ற சொற்பத் தொகையை மட்டும் இழப்பீட்டுத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, 1894ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அரசால் கையகப்படுத்தப்பட்ட சுமாா் 200 ஏக்கா் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை 25 ஆண்டுகளாகக் கிடைக்காத அவலநிலை நீடிக்கிறது.
Advertisement
இதுதொடா்பாக நடைபெற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையையும் வழங்காமல் தமிழக அரசும், சிப்காட் நிறுவனமும் பல ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகின்றன. இதனால் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு பலா் உயிரிழந்துள்ளனா். எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் ஜனவரி 25ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பெருந்துறை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு சமா்ப்பிப்பது என சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இத்தொடா் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில், பெருந்துறை, ஈங்கூா் கிராமங்களைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனா்.