ஆன்லைன் மூலம் ஆதார் எண் புதுப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை மிக எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருமே, ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
நாட்டில் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டதால், கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே, மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை இலவசமாகப் புதுப்பித்துக்கொள்ள மத்திய அரசு கால அவகாசங்களை வழங்கி வருகிறது.
ஆனால், நமக்கு இருக்காது என்று கருதி பலரும் இன்னமும் ஆதார் அப்டேட் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று கருதி, இலவசமாக ஆதார் விவரங்களை அப்டேட் செய்துகொள்ள மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு கால அவகாசத்தை நீட்டித்து இருக்கிறது.
Advertisement
Advertisement
எனவே, மக்கள் அனைவரும் 2027ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக தங்களுடைய ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அதுபோல, முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை மக்கள் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளவும் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாக ஆதார் தகவல்களை புதுப்பிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம். இது மிகவும் எளிமையானதும், பயனர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
முதலில், கூகுளில் சென்று myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
அதில், மெனுவில் இருக்கும் மை ஆதார் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும். அதில் ஒரு பட்டியல் விரியும்.
அந்தப் பட்டியலில் Update Your Aadhar தலைப்பின் கீழ் உள்ள update Demographics data என்பதை கிளிக் செய்யவும்.
அப்போது, லாகின் பக்கம் வரும்
அதில், ஒருவரது ஆதார் எண்ணை சரியாக உள்ளிடவும்.
கீழே இருக்கும் கேப்சா கோடை சரியாக உள்ளிட்டு பிரசீட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு, ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிடவும்.
சரியாக உள்ளிட்டதும் சர்வீசஸ் என்ற பக்கம் திறக்கும்.
அதில், டாக்குமென்ட் அப்டேட் என்ற வாய்ப்பைக் கிளிக் செய்து, எவ்வாறு ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ளவும்.
பிறகு நெக்ஸ்ட் கொடுக்கவும்.
அதில், ஒரு படிவம் வரும். அதில் ஆதார் எண் உள்ளிட்டவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரியாகப் பதிவு செய்து கொள்ளவும்.
அனைத்தையும் பதிவு செய்துவிட்டு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு விவரங்களை சரிபார்க்க என்பதை தேர்வு செய்யவும்.
அனைத்தும் சரியாக இருந்தால், ஆதார் எண்ணுக்கு உரியவரின் அடையாளச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழுக்கு இரண்டு ஆவணங்களை இணைக்க வேண்டும்.
அவற்றை முன்கூட்டியே ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் (ஜேபக், பிடிஎஃப், பிஎன்ஜி வகைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆவணங்களின் அளவு 2 எம்பிக்கு மேல் இருக்கக் கூடாது.
குடும்ப அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், மின் கணக்கீட்டு அட்டை, சொத்து வரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைக்கலாம். இரண்டு சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். ஒரே ஒரு சான்றிதழ்தான் இருக்கிறது என்றால் ஒன்றே ஒன்றையும் இணைக்கலாம் என்று கூறப்படுகிறது.
சான்றிதழ்கள் அவர்கள் சொன்ன அளவில் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டால், அவை பச்சை நிறத்தில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும்.
அனைத்தையும் சப்மிட் செய்துவிட்டால் அந்த ஆதார் எண் அப்டே செய்யப்பட்டுவிடும். இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
ஆதார் எண் பெற்று பத்து ஆண்டுகள் ஆகியிருந்தால், கட்டாயம் ஆதார் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.