11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி
பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி...
சென்னை, ஏப். 10 - பொதுப் பணத்தில் துவக்கப்பட்டு பதவிப் பொறுப்பில் இருந்த காரணத்தால் தனியார் பெயர்கள் வைக்கப்பட்ட கல்வி நிலையங்கள், பொதுக் கட்டிடங்கள், விளையாட்டரங்கங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றின் பெயர்களிலிருந்து தனியாருடைய பெயர்களை நீக்குவது குறித்து தமிழக அரசு யோசித்து வருகிறது.
இதன் தொடர்பாக எந்தெந்த அமைப்புகள் அல்லது நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர் அல்லது அமைச்சர்கள் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
கட்டிடங்கள், பாலங்கள், கல்வி நிலையங்கள், சிறப்பங்காடிகள், விளையாட்டு அரங்கங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றிற்கு தனியார் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளனவா? அவை பொதுப் பணத்தில் கட்டப்பட்டவையா? வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளனவா? அல்லது பதவிப் பொறுப்பில் இருந்த காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Advertisement
பொதுப் பணத்தில் கட்டப்பட்ட நிலையங்கள் அல்லது நிறுவனங்களுக்கு தனியார் பெயர்கள் வைக்கப்பட்ட விவரங்களைச் சேகரித்து அனுப்பும்படி மாவட்ட நிர்வாகத்தினருக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நதிநீர்ப் பகிர்வு - மாநிலங்களுக்கு பிரதமர் யோசனை
புதுடில்லி, ஏப். 10 - தேசத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள உணர்வையொட்டி, பல்வேறு ராஜ்ய சர்க்கார்களும் நதி நீர் பகிர்வு சம்பந்தப்பட்ட தகராறுகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் இந்திராகாந்தி இன்று கூறினார்.
முதலாவது இந்திய விவசாய காங்கிரஸை துவக்கிவைத்து அவர் பேசினார்.
கிராமங்கள் மக்களைக் கவர்ச்சிக்கச் செய்யும் பொருட்டு, கிராமப் புணருத்தாரண வேலைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் கல்விக்காக நகரங்களை நாடி வரலாம். ஆனால் படிப்பை முடித்த பிறகு அவர்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு வேண்டிய ஊக்குவிப்புகள் இருக்க வேண்டும் என்றார் பிரதமர். நமது விவசாயிகளிடை விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூடிய கிராமத் தலைவர்கள் இருக்க வேண்டும் என்றார்.
காடுகளை அழித்து விளை நலமாக்குவதற்கான வாய்ப்பு நம் நாட்டில் மிகவும் குறைவு என்றும், அவ்வாறு செய்தால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் காடுகளும் அழிந்து விடும் என்றும் பிரதமர் கூறினார். ...