23.5.1976: தமிழக அரசு ஊழியர் வரதட்சிணை வாங்க, தருவதற்கு தடை
தமிழக அரசு ஊழியர் வரதட்சிணை வாங்க, தருவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...
சென்னை, மே, 22- தமிழக அரசு ஊழியர் வரதட்சிணை வாங்குவது அல்லது தருவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
1973- ம் வருட தமிழ்நாடு சர்க்கார் ஊழியர் நடத்தை விதிகளில் இதற்கு வகை செய்யப்படவில்லை. இதற்காக புது விதி தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.
சர்க்கார் ஊழியர் யாரும் வரதட்சிணை தரவோ அன்றி வாங்கவோ கூடாது. வரதட்சிணை தருவதற்கு அல்லது வாங்குவதற்கு சர்க்கார் ஊழியர் உடந்தையாக இருக்கக் கூடாது. மணப்பெண்ணின் கார்டியன் அல்லது பெற்றோரிடமிருந்து வரதட்சிணையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு ஊழியர்கள் கோரக் கூடாது. இப் புது விதியில் வரதட்சிணை என்ற பதத்துக்கு மத்திய சர்க்காரின் 1961 வரதட்சிணைத் தடைச் சட்டத்தில் உள்ள அதே அர்த்தம் பொருந்தும் என்று விளக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
சேலம் உருக்காலை திட்டத்தை கைவிடும் பிரச்னையே இல்லை
சென்னை, மே. 22- சேலம் உருக்காலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதைக் கைவிடும் பிரச்னையே இல்லை, பிரதமர் இந்திரா காந்தியே இத்திட்டத்தில் நேரடியான அக்கறை செலுத்தி வருகிறார் என்று மத்திய அரசாங்க உருக்கு சுரங்க துணை மந்திரி சந்திரஜித் யாதவ் இன்று சென்னையில் கூறினார்.
யந்திரங்களும் மற்ற சாதனங்களும் வாங்குவதில் சேலம் உருக்காலைக்கு ஏற்படக்கூடிய நிதிக் கஷ்டங்களைப் பற்றி விவரமாக அறிவதில் பிரதம மந்திரி தனிப்பட்ட அக்கறை செலுத்தி வருகிறார் என்று யாதவ் மேலும் கூறினார்.
2 கோடி ஆண்டுகளான ஒரு பழம்பொருளை வழங்கும் விழா உதகமண்டலத்தில் நடைபெறவிருக்கிறது. அதற்குச் செல்லும் வழியில் யாதவ் சென்னைக்கு வந்திருந்தார்.
கர்நாடகத்தில் குதிரை முக இரும்புத் தாது திட்ட டைரெக்டர்கள் கூட்டம் ஏற்கனவே நடந்திருக்கிறது. (அத்திட்டத்தின் தலைமை காரியாலயம் உள்ள) பெங்களூரில் வெளிநாட்டு நிபுணர்களுடன் ஜூன் மத்தியில் மேல் ஆலோசனைகள் நடக்கும் என்று அவர் கூறினார்.
பொக்காரோ உருக்கு ஆலை நிருவாக டைரக்டரான கே.சி. கன்னா, குதிரை முக திட்ட நிர்வாக டைரக்டராக நியமிக்கப்பட்டதை அரசாங்கம் அங்கீகரித்து விட்டதாகவும் தற்போதைய பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் பெங்களூருக்கு வந்து தமது புதுப் பதவியை ஏற்றுக் கொள்வாரென்றும் யாதவ் கூறினார். ...