30.6.1976: குடும்பக் கட்டுப்பாடு: 3 குழந்தைக்கு மேலிருந்தால் சில சலுகைகள் ரத்தாகலாம்
குடும்பக் கட்டுப்பாடு தீவிர அமலுக்கு த. நா. அரசு திட்டமிட்டிருப்பது பற்றி...
சென்னை, ஜூன். 29 - தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகவும் முனைப்பாகவும் நிறைவேற்ற தமிழக அரசு சில நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது.
குறிப்பாக அரசு அலுவலாளர்கள், உள்ளாட்சி துறை அலுவலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர்கள் விஷயத்தில் அமல் நடத்த அநேகமாக முடிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி மூன்று குழந்தைகளுக்கு மேல் பெறும் அரசு அலுவலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பேறு கால (பிரசவ கால) சலுகைகளை வாபஸ் பெற அரசு திட்டமிட்டுள்ளதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து நம்பகமாக அறியப்படுகிறது.
1) மூன்று குழந்தைகளுக்கு மேல் பிரசவமானால் அவர்களுக்கு இலவச சிகிச்சை, மருந்து ஆஸ்பத்திரி சலுகை கிடையாது. 2) பெண் அலுவலாளராக இருந்தால் மூன்றாவது குழந்தைக்குப் பிறகு சம்பளத்துடன் கூடிய பிரசவ கால லீவு (விடுமுறை) கிடையாது.
Advertisement
Advertisement
3) பிரசவ கால மருத்துவ சலுகைகளை அரசு அலுவலர்கள் விஷயத்தில் திருப்பித் தரும் மருத்துவச் சலுகை (ரீ இம்பர்ஸ்மெண்ட்) இப்போது நடை முறையில் உள்ளது. அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய திட்டத்தின்படி மூன்று குழந்தைகளுக்குப் பிறகு ஏற்படும் பிரசவமாக இருந்தால் அதற்கு இந்த மருத்துவச் செலவு தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.
4) மூன்று குழந்தைகளுக்கு மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கு சொந்த காரணம், குடும்ப நிலைமை ஆகியவைகளுக்காக அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு மாற்றல் கோரும் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது. ...
விமானக் கடத்தல்: கொரில்லாக்களின் நிபந்தனை
நைரோபி, ஜூன். 29 - 250 பயணிகள், விமான ஊழியர்களுடன் பிரெஞ்சு விமானமொன்றை வழிமறித்து, உகாண்டாவில் உள்ள என்டெபி விமான நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ள பாலஸ்தீன கொரில்லாக்கள், இப்போது இஸ்ரேல், கீனியா, ஐரோப்பாவில் உள்ள 53 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாக, உகாண்டா ரேடியோ தெரிவித்தது.
இந்தக் கைதிகள் என்டெபி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வியாழக்கிழமை மாலை 5-30 மணிக்குள் (இந்திய நேரம்) விமானப் பயணிகளுக்குப் பதிலாக அவர்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியதாக, ரேடியோ தெரிவித்தது.
கொரில்லா மிரட்டல்
உகாண்டா பந்தோபஸ்துப் படையினர் நேற்றிரவு விமானத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றனர். உகாண்டா படையினர் இந்த விஷயத்தில் தலையிட்டால் விமானத்திலுள்ள பிரயாணிகள், மற்றும் விமான சிப்பந்திகளை கொன்று தீர்த்து விடுவோம் என்று கொரில்லாக்கள் பயமுறுத்தியிருப்பதாக உகாண்ட ரேடியோ கூறுகிறது. பிரயாணிகளில் பல இஸ்ரேலியர்களும் இருக்கிறார்கள். உகாண்டா படையினர் விமானத்திற்கு 50 மீட்டர் தூரத்தில் வந்தால் எல்லோரையும் கொன்று விடுவோம் என்று அவர்கள் சொன்னார்கள்.
உகாண்டா அதிபர் இடிஅமீன் இவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முயற்சி செய்துகொண்ருக்கிறார். ஆனால் மொழி தெரியாத காரணத்தினால் இதில் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.
விமான நிலையத்திலிருந்து வெளியே போகும் வழிகளையெல்லாம் உகாண்டா படைகள் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரையில் மோதல் எதுவும் ஏற்படவில்லை.
30.6.1976: Family Planning: Certain concessions may be withdrawn if there are more than three children.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.