தில்லியில் பலத்த காற்றுடன் மழை! மூன்று விமானங்கள் சேதம்!
தில்லியில் பெய்த பலத்த மழையால் விமானங்கள் சேதமடைந்தது பற்றி...
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழையுடன் பலத்த காற்று வீசியதில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான இணைப்பு படிக்கட்டுகள் மோதியதில் ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தன.
தில்லியில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நிலையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயன்படுத்தப்படும் இண்டிகோ நிறுவனத்தின் படிக்கட்டுகள், பலத்த காற்றால் நகர்ந்து, ஏர் இந்தியாவின் விமானத்தின் மீது மோதியது.
இதனால், விமான நிலையத்தில் டெர்மினல் 2-ல் நிறுத்துமிடம் 206-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியாவின் மூன்று விமானங்கள் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, மூன்று விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வின் போது, விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மழை, புயல் குறித்து வானிலை முன்னறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
எனினும், சேதமடைந்த விமானங்களில் இரண்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும், மூன்றாவது விமானத்தைச் சரிசெய்ய சற்று கூடுதல் காலமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.