2.5.1976: கூட்டுறவுகள், கோவில்கள் நிர்வாக சீரமைப்பு மசோதா - கருணை இல்லங்கள், தெய்வீக பேரவைக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தம்
கூட்டுறவுகள், கோவில்கள் நிர்வாக சீரமைப்பு மசோதா பற்றி...
சென்னை, மே. 1- தமிழ் நாட்டில் கூட்டுறவு சங்கங்கள், கோவில்கள் ஆகியவற்றின் நிர்வாகத்தைச் சீரமைத்து செம்மையாக இயங்கச் செய்வதற்கான இரண்டு மசோதாக்கள் உள்பட நான்கு மசோதாக்களை தமிழ் நாட்டுக்கான பார்லிமெண்டரி ஆலோசனைக் குழு இன்று ஏற்றது.
இந்த மசோதாக்கள் இனி ராஷ்டிரபதி அங்கீகாரத்துக்குப் பின் சட்டமாகிவிடும்.
இக் குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மொத்தம 60 எம்.பி.க்களில் 48 பேர் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
Advertisement
இன்றைய கூட்டத்தில் மொத்தம் நான்கு மசோதாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவற்றில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (விசேஷ அதிகாரிகள் நியமனம்) மசோதா, தமிழ் நாடு ஹிந்து சமய அற நிலைய கட்டளைகள் (திருத்தமும் விசேஷ ஷரத்துகளும் ) மசோதா, இரண்டும் முக்கியமானவை.
சில வகை கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் போர்டின் பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், மொத்தத்தில் இரண்டு வருடங்களுக்கு மேற்படாமல் கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க விசேஷ அதிகாரிகளை நியமிக்கவும் கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா வகை செய்கிறது. ...
12 ஆண்டாக இல்லாத வெய்யில் - சென்னையில் 109 டிகிரி உஷ்ணம்: மேலும் 2 நாள் நீடிக்குமாம்
சென்னை, மே.1 - சென்னை நகரில் சனிக்கிழமை யன்று, கடந்த 12 ஆண்டுகளாக இல்லாத அளவு கடும் வெயில் கொளுத்தியது. தொட்ட இடமெல்லாம் அனலாகக் கொதித்தது.
வெள்ளியன்று 103.7 டிகிரியாக அந்த வெயிலின் அளவு சனிக்கிழமை யன்று ஒரே நாளில் 109.1 டிகிரியாக திடீரென உயர்ந்தது.
இதே போன்ற வாட்டி வதைக்கும் வெய்யில் இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட விசேஷ அறிக்கை தெரிவித்தது.
6 மணி நேரம் அனல் 'மழை'
சனிக்கிழமையன்று பகலில சுமார் 6 மணி நேரத்திற்கு சூரியனின் அனல் கதிர்கள் மழை போலவே பொழிந்தன; புழுக்கம் மக்களைத் திக்குமுக்காட வைத்து விட்டது.
நகர பஸ்களில் பயணம் செய்வது நரகமாக இருந்தது; பஸ்களின் கூரைகளின் மேலே அனல் பிழம்பு தாக்குதல்கள் அப்படியே உள்ளே பிரதிபலித்தது; கம்பிகளையோ, சீட்டுகளையோ தொட்டவுடனே சுட்டது.
மவுண்ட் ரோடின் நடை பாதைகளிலே நடந்து சென்ற மக்கள் தத்தளித்துப் போனார்கள். குளிர்பானக் கடைகளிலும் "லஸ்ஸி" கடைகளிலும் வியாபாரம் ஜரூராக நடந்தது. சில கடைகளில் தீர்ந்து போனதால் கடைகளையே மூடி விட்டார்கள். ...