பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி சையது அலி பாத்திமா (47). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி, கோவை அரசு மருத்துவமனையில் மார்ச் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாத்திமாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், திங்கள்கிழமை பாத்திமா உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் உயிரிழந்துள்ளனர்.