ஆதரவு திரட்டுவது தொடர்பான விவரங்களை நிறுவனங்களிடம் கோர சட்டத்தில் இடமில்லை: மத்திய அரசு
நிறுவன மேம்பாட்டுக்காக பணம் செலவிட்டு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கும்படி
நிறுவன மேம்பாட்டுக்காக பணம் செலவிட்டு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கும்படி நிறுவனங்களிடம் கேட்பதற்கு, இந்திய நிறுவனங்கள் சட்டத்தில் இடமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்காக, ரூ. 125 கோடி செலவிட்டு ஆதரவு திரட்டியது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது லஞ்சம் என இந்தியாவில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், அமெரிக்காவில் ஆதரவு திரட்டுவதற்காக பணம் செலவிடுவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய நிறுவனங்கள் ஆதரவு திரட்டுவதற்காக பணம் செலவிட்டது தொடர்பான விவரங்கள் உள்ளனவா? எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது? எந்தெந்த நிறுவனங்கள் செலவிட்டுள்ளன என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
Advertisement
இது தொடர்பாக, நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் சச்சின் பைலட் எழுத்துப் பூர்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்: ஆதரவு திரட்டுவதற்காக பணம் செலவிடுவது வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், நிறுவனங்கள் சட்டம் 1956இன் படி இது குறித்து எவ்வித வரையறைகளும் இல்லை. ஆதரவு திரட்டுவதற்காக செலவிட்ட தொகையை வெளிப்படையாக அறிவிக்கும் படி கோருவதற்கும் சட்டத்தில் வகை செய்யப்படவில்லை என்றார்.
முன்னதாக கடந்த டிசம்பரில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த சச்சின் பைலட், "எது ஏற்கத்தக்கது, எதை ஏற்க முடியாது என்பதை வரையறை செய்வதற்கு இது சரியான நேரம். எது சட்டப்பூர்வமானது, எது சட்டவிரோதமானது என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் இதற்கான வரையறை உள்ளது. ஆதரவு திரட்டுவதற்காக பணம் செலவிடுவதை லஞ்சம் என்று கூறுவது தவறானது. சிலர் லஞ்சம் என்று குற்றம் சாட்டுகின்றனர்' எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட் விவகாரம்: மக்களவையில் தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் எழுத்துப்பூர்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்: வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய ஆதரவு திரட்டுவதற்காக பணம் செலவிட்டது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு நபர் விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. ஹரியாணா-பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவிடம், மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் இக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்றார்.