இலங்கை தீர்மானம்: மக்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் அமளி
இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை கடும்
இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை காலையில் இரு முறையும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நாள் முழுவதுமாகவும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் வியாழக்கிழமை காலையில் கூடியதும், வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் மறைவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கூச்சல் குழப்பம்: அதைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அதிமுக, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் மேங்கு வங்க மாநிலத்துக்குக் கூடுதல் அரிசி ஒதுக்காததைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பதில் அளிக்க அமைச்சர் இல்லை: மூத்த உறுப்பினர் பி.சி. சாக்கோ தலைமையில் மக்களவை மீண்டும் கூடியபோது, இலங்கை விவகாரம் தொடர்பாக பேச, மக்களவை அதிமுக தலைவர் தம்பிதுரையை சாக்கோ அழைத்தார். ஆனால், இதுகுறித்து பதில் அளிக்க அவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் இல்லாததால், மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டபடி இருந்தனர். இதையடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் துணைத் தலைவர் கரிய முன்டா தலைமையில் மக்களவை கூடியதுபோதும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்.... இலங்கை விவகாரம் மாநிலங்களவையிலும் வியாழக்கிழமை எதிரொலித்தது. கேள்வி நேரம் தொடங்கியதும் ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையைக் கண்டித்து திமுக, அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் அவை கூடி மாலை 4 மணி வரை நடைபெற்றது. பின்னர் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் இலங்கை விவகாரத்தை எழுப்பியதால் அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.