முகப்பு
இந்தியா

சிபிஐ சோதனை ஏற்கத்தக்கதல்ல: நாராயணசாமி

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ வியாழக்கிழமை நடத்திய சோதனை ஏற்கத்தக்கதல்ல என்று

Updated On : 22 மார்ச், 2013 at 1:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ வியாழக்கிழமை நடத்திய சோதனை ஏற்கத்தக்கதல்ல என்று காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், வே. நாராயணசாமி ஆகியோர் கூறினர்.

சென்னையில் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழு வியாழக்கிழமை சோதனை நடத்தினர். வெளிநாட்டில் இருந்து உரிய வரி செலுத்தாமல் வாகனங்கள் இறங்குமதி செய்தது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.  இதையடுத்து, சோதனை தொடர்பாக தில்லியில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "இந்தத் தருணத்தில் சிபிஐ சோதனை நடத்தும் செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும். இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல; இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

Advertisement

பொதுவாக நான் வேறு துறைகளின் செயல்பாட்டில் தலையிடுவதில்லை. இந்த நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருடன் பேசியிருக்கிறேன்' என்றார்.

இதற்கிடையே, மத்திய பணியாளர்நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமியிடம், "அரசியல் காரணங்களுக்காக, ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதா?' என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "சோதனை நடவடிக்கை மிகவும் துரதிருஷ்டவசமானது. ஸ்டாலின் மீது சிபிஐ எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவ்வாறு இருக்கும்போது சிபிஐ அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரது வீட்டுக்குச் சோதனைக்காகச் சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.