முகப்பு
இந்தியா

ஊழல் அரசியல்வாதிகள் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டார்கள்: அண்ணா ஹசாரே

ஊழல் அரசியல்வாதிகள் லோக்பால் மசோதாவை ஒருபோதும் நிறைவேற்ற விடமாட்டார்கள் என சமூக சேவகர் அண்ணா

Updated On : 2 ஏப்ரல், 2013 at 12:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

ஊழல் அரசியல்வாதிகள் லோக்பால் மசோதாவை ஒருபோதும் நிறைவேற்ற விடமாட்டார்கள் என சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.

தன்னுடைய மக்கள் சந்திப்பு யாத்திரையை பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய அண்ணா ஹசாரே மாலையில் ஜலந்தரை வந்தடைந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியல்வாதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அவர்களோ பதவிக்கு வந்தவுடன் கொள்ளைக்காரர்களாக மாறிவிடுகிறார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

Advertisement

தற்போது 163 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 15 அமைச்சர்கள் ஊழல் கறை படிந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டிலிருந்து எப்படியாவது தப்பிக்கப் பார்ப்பார்களா அல்லது மக்கள் சேவையில் ஈடுபடுவார்களா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அதனால் அடுத்த தேர்தலில் நேர்மையானவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என உறுதி பூணுங்கள்.

லோக்பால் மசோதா என்பது ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஓர் உன்னதமான முயற்சி. ஆனால் ஊழல் அரசியல்வாதிகள் ஒருபோதும் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டார்கள். மக்களாகிய நீங்கள் நித்திரையிலிருந்து உடனடியாக விழித்துக்கொள்ளுங்கள். இனிமேலும் அரசியல்வாதிகள் உங்களை ஏமாற்ற அனுமதிக்கக் கூடாது. என் இறுதி மூச்சு உள்ளவரை லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடுவேன் என்றார்.

அவருடைய யாத்திரையின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை அவர் லூதியானாவுக்கு வந்தடைந்தார். அங்குள்ள நம்தாரி சஹீதி சமர்க் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதையடுத்து அண்ணா ஹசாரே பேசியதாவது:

நம்முடைய இயக்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க "ஜன் சன்சத்' என்ற குழு அமைக்கப்படும். இதில் சமூகத்தின் அனைத்துதரப்பட்ட மக்களும் பிரதிநிதிகளாக இருப்பார்கள். தவறிழைக்கும் வேட்பாளர்களின் பதவியைத் திரும்பப் பெறுவது, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளிட்ட பல செயல்திட்டங்கள் குறித்து இந்தக் குழு ஆராயும்.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியதாவது: நம்முடைய நாடு ஊழலால் சூழப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் ஜாதி, மதம், மாநில எல்லை ஆகியவற்றின் பெயரில் நம்மை பிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சூழ்சிக்கு நாம் முட்டாள்தனமாக இரையாகிக் கொண்டிருக்கிறோம். இப்போது நாம் விழித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாட்டுக்கு உண்மையாக சேவை செய்ய நினைப்பவர்களை மட்டுமே தேர்தலில் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.