முகப்பு
இந்தியா

சேமிப்புக் கிடங்கு  பற்றாக்குறை: கோதுமையை கூடுதலாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டம்

கோதுமை கொள்முதல் துவங்க உள்ள நிலையில், சேமிப்புக் கிடங்கு பற்றாக்குறையை சமாளிக்க கையிருப்பில் உள்ள

Updated On : 2 ஏப்ரல், 2013 at 12:39 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

கோதுமை கொள்முதல் துவங்க உள்ள நிலையில், சேமிப்புக் கிடங்கு பற்றாக்குறையை சமாளிக்க கையிருப்பில் உள்ள கோதுமையை கூடுதலாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் திங்கள்கிழமை கூறியதாவது: இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ.) சார்பில் கடந்த பருவத்தில் 3.8 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 90 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் உள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி முதல் கோதுமை அறுவடை முழு வீச்சில் தொடங்க உள்ளது. இந்த பருவத்தில் 4.5 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கோதுமை கையிருப்பு 5.4 கோடி டன்னாகும். இவை முழுவதையும் சேமிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால், ஏற்கெனவே கையிருப்பில் உள்ள கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.

Advertisement

2012-13 நிதியாண்டில் 95 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் 50 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவை இன்னமும் முழுமையாக ஏற்றுமதி செய்யப்படவில்லை.

 எனவே, ஏற்றுமதிக்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான், கையிருப்பில் உள்ள கோதுமை குறைந்து புதிதாக கொள்முதல் செய்யப்படும் கோதுமையை சேமிப்பதற்கு இடம் கிடைக்கும் என்றார்.

 மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்தின் உணவு தானிய கையிருப்பு 6.28 கோடி டன்னாக இருந்தது. கழகத்தின் மொத்த தானிய சேமிப்புத் திறன் 7.4 கோடி டன் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.