நெசவாளர்கள் மீதான துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணைக்கு அசாம் அரசு உத்தரவு
நெசவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நெசவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற சுவால்கச்சியில் செயற்கை பட்டு துணிகளை விற்கக்கூடாது என வலியுறுத்தி பட்டு நெசவாளர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது தொடர்பாக மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் ராக்கிபுல் ஹுசேன், அசாம் பேரவையில் கூறியதாவது: இப்பிரச்னை தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரினர். இதையடுத்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.
Advertisement
கைத்தறித் துறை அமைச்சர் பிரணதி புக்கான் கூறியது: சுவால்கச்சியில் தற்போது 5 பட்டுக்கூடு வங்கிகள் உள்ளன.
விரைவில் மேலும் கூடுதலான பட்டுக்கூடு வங்கிகள் தொடங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல் பட்டுக்கூடு வங்கிகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
சுவால்கச்சி பட்டுக்கான தனி முத்திரை குறித்து உள்ளூர் நெசவாளர்களிடம் அரசு பேச்சு நடத்தும். போலி பட்டு விற்பனையை தடுக்க சிறப்பு படைகள் அமைக்கப்படும். போலி பட்டு ஆடைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அசாம் கனபரிஷத் கட்சி பேரவைத் தலைவர் பானி பூஷண் செüத்ரி, எம்.எல்.ஏ. கேசவ் மகந்தா ஆகியோர் சுவால்கச்சி வன்முறை, துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். செயற்கை பட்டு இறக்குமதியால் சுவால்கச்சி பட்டு நெசவாளர்கள் கடும் பாதிப்படைகின்றனர். போலி பட்டு பொருள்களை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே சுவால்கச்சியில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு 12 மணி நேரமாக தளர்த்தப்பட்டுள்ளது.