முகப்பு
இந்தியா

மேற்கு வங்க அரசுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு

Updated On : 2 ஏப்ரல், 2013 at 12:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மாநில அரசு அறிவித்துள்ள உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

நீதிபதி விஸ்வநாத் சோமாதர் முன்பு ஆஜரான தேர்தல் ஆணைய வழக்குரைஞர் எல்.சி. பிஹானி கூறுகையில், மாநில அரசின் தேர்தல் தேதி அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எனினும் மனுவை பட்டியல் இட்டபின் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி சோமாதர் தெரிவித்தார்.

Advertisement

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் இடையே உள்ளாட்சித் தேர்தல் தேதி தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

மாநில காவல்துறையின் மேற்பார்வையில் இரு கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மத்திய துணை ராணுவப்படையினரின் மேற்பார்வையில் 3 கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.

தேர்தல்களை தாமதிக்க முயற்சி: இடதுசாரிகள் புகார்

தேர்தல்களை தாமதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என இடதுசாரி கூட்டணி புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக கூட்டணியின் தலைவர் பிமன் போஸ் கூறியதாவது: தேர்தல்களை தாமதிக்க மாநில அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. இதனால் மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை நாடி உள்ளது.

உள்ளாட்சி அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல்ராய் தான் இப்பிரச்னைக்கு காரணம். தேர்தல் ஆணையத்துடன் மோதும் பணியை அமைச்சரும், கட்சியின் பெயரைக் காப்பாற்றும் பணியை முகுல்ராயும் செய்து வருகின்றனர்.

உள்கட்சிப் பூசலால் பாதிக்கப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் அவற்றை தீர்ப்பதற்காக தேர்தலை தள்ளிப்போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து விட்டால் ஊரக வளர்ச்சித்துறையின் நிதி அவற்றுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். மேலும் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார் போஸ். இதற்கிடையே இப்பிரச்னை தொடர்பாக இடதுசாரிகள் ஆளுநர் எம்.கே. நாராயணனை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

உள்ளாட்சி தேர்தல் பிரச்னைக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாசார்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் காலதாமதம் ஆனால் திரிணமூல் காங்கிரஸ் அரசு தான் காரணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.