துணை ராணுவப் படையை நவீனமயமாக்க ரூ.11 ஆயிரம் கோடி
மத்திய துணை ராணுவப் படையை நவீனமயமாக்க ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு புதன்கிழமை ஒதுக்கியுள்ளது.
மத்திய துணை ராணுவப் படையை நவீனமயமாக்க ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு புதன்கிழமை ஒதுக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை உயர்நிலைக் குழு, இந்த நிதியாண்டிலிருந்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை, எல்லை ஆயுதப் பிரிவுப் படை, அசாம் ரைஃபிள் படை, தேசிய பாதுகாப்புப் படை போன்ற மத்திய துணை ராணுவப் படைகளுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
Advertisement
நவீன ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள், பாதுகாப்பு வாகனங்கள், இரவு நேரத்திலும் துல்லியமாக ரோந்துப் பணியில் ஈடுபட உதவும் நவீன வகை கண்ணாடிகள், ரோந்து வாகனங்கள், கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் புதிதாக உற்பத்தி செய்யவும் இறக்குமதி செய்யவும் இந்த் தொகை பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம், இந்தியா-மியான்மர், இந்தியா-பூட்டான், இந்தியா-திபெத் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு உள்நாட்டு பாதுகாப்பும் தன்னிறைவு பெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பண்பலை வானொலிச் சேவை: நாடு முழுவதும் 294 நகரங்களில் எஃப்.எம். எனப்படும் பண்பலை வானொலிச் சேவை தொடங்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, இந்த நகரங்களில் 839 பண்பலை வானொலி நிலையங்களை அமைக்க முறையான ஏலம் நடத்தப்படும். இந்த ஏலத்தில் மின்னணு முறையில் தனியாரும் கலந்து கொள்ளலாம் எனவும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.