முகப்பு
இந்தியா

ஆருஷி கொலை வழக்கு தல்வார் தம்பதியின் கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

ஆருஷி கொலை வழக்கு தொடர்பாக 14 சாட்சியங்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற தல்வார் தம்பதியின் கோரிக்கை மனுவை

Updated On : 22 மே 2013, 2:38 am IST
பகிர்:

ஆருஷி கொலை வழக்கு தொடர்பாக 14 சாட்சியங்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற தல்வார் தம்பதியின் கோரிக்கை மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு நொய்டாவில் உள்ள டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் தம்பதி வீட்டில் அவர்களது மகள் ஆருஷி மற்றும் பணியாளர் ஹேம்ராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் தகாத உறவு வைத்திருந்ததால் தல்வார் தம்பதி தான் அவர்களை கொலை செய்ததாக சிபிஐ அவர்களை கைது செய்தது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி வழக்கு தொடர்பாக 14 சாட்சியங்களை விசாரணைக்காக அழைக்க வேண்டும் என்னும் தல்வார் தம்பதியின் கோரிக்கையை காஜியாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

Advertisement

Advertisement

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நேரடியாக தல்வார் தம்பதி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை. உயர்நீதிமன்றத்தை முதலில் நாட வேண்டும் என அறிவுறுத்தியது.

இதையடுத்து 14 சாட்சியங்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் தல்வார் தம்பதி மனுத் தாக்கல் செய்தனர்.

வழக்கு தொடர்பாக சிபிஐ சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அனுராக் கன்னா கூறியதாவது:

விசாரணையை தாமதப்படுத்துவதற்காக தல்வார் தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

எந்த சாட்சியை விசாரணைக்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என தீர்மானிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் தயால் காரே கூறியதாவது: சாட்சியங்களை விசாரணைக்கு அழைக்கும்படி அரசுத் தரப்பை வற்புறுத்த முடியாது. எனவே தல்வார் தம்பதியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.