சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு: விண்டூ தாரா சிங் கைது
சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் நடிகர் விண்டூ தாரா சிங் மும்பையில் செவ்வாய்க்கிழமை
சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் நடிகர் விண்டூ தாரா சிங் மும்பையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஐபிஎல் போட்டியில் ஸ்பாட்-ஃபிக்ஸிங் நடைபெற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பாலிவுட் நடிகர் இவராவார்.
சூதாட்டக்காரர்களுடன் விண்டூவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுடன் விண்டூ தொலைபேசியில் உரையாடிய பதிவு தங்களிடம் உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
Advertisement
ஐபிஎல் போட்டிகளை நேரில் கண்டு களித்ததுடன், விளையாட்டு முடிந்த பின் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். விண்டூ தாரா சிங் மீது குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின் அவர், தில்லி பெருநகர் நீதிமன்ற நீதிபதி எம்.என்.சலீம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 24-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
"ஸ்பாட்-ஃபிக்ஸிங் விவகாரத்தில் அவருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம். அவரிடம் மேற்கொள்ளும் விசாரணையில் இதில் தொடர்புடையவர்கள் குறித்த விவரம் வெளிவரும்' என்று போலீஸார் தெரிவித்தனர். சூதாட்டக்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதிலிருந்து விண்டூ தாரா சிங்கை போலீஸார் கண்காணித்து வந்தனர். இதைத் தொடர்ந்து இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மறைந்த புகழ்பெற்ற மல்யுத்த வீரரும், நடிகருமான தாரா சிங்கின் மகனாவார்.