பிரதமர் வயது திருத்தம்; வேட்புமனு ஏற்பு
மாநிலங்களவை தேர்தலுக்கான பிரதமரின் வேட்புமனு செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரதமர் தனது வயதை 80 என்று
மாநிலங்களவை தேர்தலுக்கான பிரதமரின் வேட்புமனு செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரதமர் தனது வயதை 80 என்று திருத்தம் செய்துள்ளார்.
அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மே 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தனது வேட்புமனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டன. அப்போது பிரதமரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
மாநிலத்திலிருந்து இரண்டாவது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பிற மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சான்டியஸ் குஜூர் இதற்காக மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது வயது 82 என்று குறிப்பிடப்பட்டிருந்ததை 80 என அவர் திருத்தம் செய்துள்ளார். வேட்புமனு பரிசீலனைக்கு முன்னர் வேட்பாளர்கள் தங்களது மனுவில் திருத்தம் செய்யும் பொருட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இயலும். இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் தனது வயதை 80 என திருத்தம் செய்துள்ளார் என அசாம் மாநில சட்டப் பேரவை வட்டாரங்கள் தெவித்தன.
இந்நிலையில், அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு இரண்டாவது உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இரண்டாவது இடத்துக்கு, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த அமீனுல் இஸ்லாம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தங்களுடைய கட்சி ஆதரவளித்து வருவதால் காங்கிரஸ் தனது இரண்டாவது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
மேலும், முதல் உறுப்பினர் இடத்துக்குப் பிரதமர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது போல, இரண்டாம் இடத்தை மாநில கட்சிக்கு விட்டுத் தர வேண்டுமென அது கூறியிருக்கிறது.