தெலங்கானா: விரைவில் முடிவை அறிவிக்கிறது காங்கிரஸ்
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பான பிரச்னையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கவுள்ளது.
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பான பிரச்னையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கவுள்ளது.
தெலங்கானா விவகாரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும், தொடர்ந்து பெரும் பிரச்னையாக நீடித்து வருகிறது. இது விஷயத்தில் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவது தொடர்கதையாகிறது.
இரு நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் கேசவராவ், இரு எம்.பி.க்கள், தெலங்கானா ராஷ்ட்டிர சமிதியில் இணைந்தனர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெலங்கானா குறித்த நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் தெலங்கானா விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் இதில் பங்கேற்றார். ஆந்திர மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த பின்னர், தெலங்கானா குறித்த தனது நிலைப்பாட்டை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.