என்.சி.டி.சி. அமைக்க மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை (என்.சி.டி.சி.) அமைக்க மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை (என்.சி.டி.சி.) அமைக்க மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ஷிண்டே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:÷""என்.சி.டி.சி. அமைக்கும் விஷயத்தில் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில், ஆலோசனை செய்த பிறகே முடிவு எடுப்போம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற முயற்சிக்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திவிட்டேன்.
Advertisement
என்.சி.டி.சி. தொடர்பாக மாநில முதல்வர்கள் தெரிவித்த பரிந்துரைகளை ஏற்று, அதை திருத்தியுள்ளோம். என்.சி.டி.சி.யை உளவுத்துறையின் கீழ் அமைக்கக்கூடாது என முதல்வர்கள் தெரிவித்த கோரிக்கையை ஏற்றோம். அதை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும்படி சட்ட முன்வரைவை திருத்தினோம். மாநில போலீஸாருக்குத் தெரிவிக்காமல் கைது நடவடிக்கைகளில் என்.சி.டி.சி. அதிகாரிகள் தன்னிச்சையாக ஈடுபடக்கூடாது என்று முதல்வர்கள் தெரிவித்தனர். அதையும் ஏற்றுக்கொண்டோம். அதன் பின்பும், சில மாநிலங்களின் முதல்வர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், திருத்தப்பட்ட முன்வரைவை முதலில் முதல்வர்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்தை கேட்டோம். அவர்கள் தெரிவித்த பரிந்துரைகள் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்ட பின்புதான், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் முன்வரைவை அளிப்போம்'' என்றார்.
என்.சி.டி.சி. அமைப்பதற்கு முதல்வர்கள் ஜெயலலிதா (தமிழ்நாடு), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), நிதீஷ் குமார் (பிகார்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), சிவராஜ் சிங் செüகான் (மத்தியப் பிரதேசம்), நரேந்திர மோடி (குஜராத்) உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.