நாடு முழுவதும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
நாடு முழுவதும் உள்ள காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி...
நாடு முழுவதும் உள்ள காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 18) உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை சூழல் அமைப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம், பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் கல் குவாரி அல்லது கல் உடைக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எல்லையாக இருந்த 400 முதல் 500 மீட்டரை 250 மீட்டராக குறைக்க உத்தரவிடும்படி, தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதனையடுத்து, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் தனது ஏப்ரல் மாத உத்தரவில் கல் குவாரி அமைப்பதற்கு காடுகளின் எல்லைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கும், கல் உடைக்கும் ஆலைகள் 400 மீட்டர் தொலைவிலும் அமைப்பதற்கான கட்டுப்பாடு பொருந்தும் என்று கூறியிருந்தது.
இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
நீதிபதிகள் கூறியதாவது:
“நமது உயர் நீதிமன்றங்களின் கருத்தை நாம் சீர்குலைக்க முடியாது. உயர் நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுரை கூற நாம் தலைமை ஆசிரியர்கள் அல்ல. உயர் நீதிமன்றங்களும் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் ஆகும்.
மேலும், அதிகாரமுள்ள இந்த அமைப்பு ஏற்கெனவே வழங்கிய தொலைவைக் குறைத்துள்ளது. உயர்நீதிமன்றமே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்க வேண்டும். இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலம் உள்பட நாடு முழுவதும் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.