அயோத்திக்குச் செல்வதில் சிக்கலா? பிரிஜ் பூஷண் சொல்வதென்ன?
அயோத்திக்குச் செல்வதில் சாதாரண பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமம் பற்றி..
அயோத்திக்குச் செல்வதில் சாதாரண பக்தர்களுக்குக் சிரமமான ஒன்றாக மாறியுள்ளதாக பாஜக தலைவரும் முன்னாள் எம்பியுமான பிரிஜ் பூஷண் சரன் சிங் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இக்கோயிலைப் பிரதமர் மோடி தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. நாள்தோறும் இக்கோயிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்துசெல்கின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி கோயிலுக்குச் சாதாரண மக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். ராமர் கோயில் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள், இன்று மிகவும் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement
அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, அதில் முக்கிய பங்காற்றியவர்களே அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கோயில் கட்டப்படும்போது தேவிபதன் மற்றும் பஸ்தி மண்டலங்கள் மற்றும் அயோத்தியைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பணம், மனிதவளம் போன்ற ஆதரவை வழங்கினர்.
முன்பெல்லாம் நாகேஷ்வர்நாத் மற்றும் ஹனுமன்கர்ஹி உள்ளிட்ட கோயில்களில் வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்குத் தொடர்ந்து வந்து சென்றனர்.
ஆனால், தற்போது அயோத்தியைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், ரூ. 200 பணம் கொடுத்தால் மட்டுமே அவை அகற்றப்படுவதாகவும் பிரிஜ் பூஷன் சிங் குற்றம் சாட்டினார்.
பாதுகாப்பு எனற பெயரில் உள்ளூர் வெளியூர் மக்கள் என இருதரப்பினரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறிய பாஜக தலைவர், தாமே இன்னும் ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவில்லை.
வினய் கதியார் போன்ற மூத்த தலைவரே அடையாளச் சரிபார்ப்புக்கு உட்பட்டு அனுமதிச் சீட்டு பெற வேண்டிய நிலை இருக்கும்போது, சாதாரண பக்தர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்..
பக்தர்களுக்கான ஏற்பாடுகள் எளிமையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொதுமக்களின் அதிருப்தி அருகிலுள்ள பகுதிகளில் தேர்தல் முடிவுகளைப் பாதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனக்கும் எம்எல்ஏவாக உள்ள தமது மகனுக்கும் எதிராக அண்மையில் விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிங், அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை, பொது வாழ்வில் இத்தகைய மிரட்டல்கள் இயல்பானவை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் செயலாக இது இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பொது நலன் சார்ந்த பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்புவேன் என்றும் அவர் தெரிவித்தார்.