சுரங்கப் பாதையில் திடீரென நின்ற தில்லி மெட்ரோ ரயில்
தில்லி சென்ட்ரல் செகரடரியேட்-உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் திடீரென நின்றுவிட்டதால் ஒன்றரை மணி நேரமாக சுமார் 1,800 பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
தில்லி சென்ட்ரல் செகரடரியேட்-உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் திடீரென நின்றுவிட்டதால் ஒன்றரை மணி நேரமாக சுமார் 1,800 பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
மற்றொரு மெட்ரோ ரயில் வரவழைக்கப்பட்டு, நின்ற ரயில் சென்ட்ரல் செக்ரடரியேட் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஹூடா சிட்டி சென்டர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எட்டு பெட்டிகள் கொண்ட ரயில், காலை 9.24 மணிக்கு சென்ட்ரல் செகரடரியேட்-உத்யோக் பவன் ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென நின்றுவிட்டது.
Advertisement
நின்ற இடம் சுரங்க வழி என்பதால் இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயணிகள் தவித்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சுரங்க வழியில் நின்றுவிட்டது என்ற தகவலை ரயில் ஓட்டுநர் தெரிவித்ததும் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் மேலும் தவிப்புக்குள்ளாகினர்.
மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அந்த இடத்துக்கு விரைந்து வந்து பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், பழுதை உடனடியாகச் சரி செய்ய முடியவில்லை. அதனால், சுரங்கப் பாதையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக 1,791 பயணிகள் ரயில் பெட்டிகளிலேயே முடங்கினர்.
இதையடுத்து, வேறு ஒரு ரயில் வரவழைக்கப்பட்டு, நின்ற ரயில் இழுத்துச் செல்லப்பட்டு சென்ட்ரல் செகரடரியேட் ரயில் நிலைய நடைபாதைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகே பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு வெளியேறினர்.
4 ரயில்கள் ரத்து: ஹூடா சிட்டி சென்டர் ரயில் பயணத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஜஹாங்கிர்புரி-ஹூடா சிட்டி சென்டர் ஆகியவற்றுக்கு இடையிலான 6 ரயில்களும், விஷ்வ வித்யாலயா-குதுப்மினார் இடையிலான 4 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. ஐந்து ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. காலை 11 மணிக்குப் பிறகு சகஜ நிலை திரும்பியது.
விசாரணை நடத்த மூவர் குழு: ரயில் திடீரென நின்றதால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் மங்கு சிங் வருத்தம் தெரிவித்தார்.
"நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் திடீரென நின்றதற்கான தொழில்நுட்ப காரணங்கள் குறித்து அக்குழு அறிக்கை அளிக்கும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், இது போன்ற சமயங்களில் சுரங்கப் பாதைகளில் பயணிகளை துரிதமாக மீட்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று ஒரு செய்திக்குறிப்பில் மங்கு சிங் கூறியுள்ளார்.
""வெளியேறுவேனா என்று கலங்கிவிட்டேன்''
சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் திடீரென நின்றதில் பயணிகள் மத்தியில் மிகுந்த கலக்கமும், பீதியும் ஏற்பட்டது.
""விஷ்வ வித்யாலயா பகுதிக்கு வரை நன்றாக சென்று கொண்டிருந்த ரயில், திடீரென சுரங்கப் பாதையில் நின்றதும் பயந்துவிட்டோம். மற்ற எந்த ரயில்களும் அந்த பகுதி வழியாக வர முடியவில்லை.
ரயில் நின்றதும் செல்போனில் சிக்னலும் குறைவாகிவிட்டது. குர்கானுக்குச் செல்ல வேண்டியிருந்த வயதான பெண் ஒருவர் தனது மகனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க முயன்றார்.
ஆனால், இணைப்புக் கிடைக்கவில்லை. அந்த கலக்கம் காரணமாக, அவர் மயக்கமடையும் நிலைக்குச் சென்றுவிட்டார்'' என்று ரகுராஜா என்ற பயணி கூறினார்.
""செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பிரச்னையால் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
அதைவிட, ரயிலில் இருந்து வெளியேறுவேனா என்று கலங்கிவிட்டேன்'' என்று ராபின் பன்சால் என்ற தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.