மாவோயிஸ்டு தாக்குதலில் காயமடைந்த வி.சி. சுக்லா மரணம்
கடந்த மாதம் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.சி. சுக்லா செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.
கடந்த மாதம் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.சி. சுக்லா செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"மூன்று குண்டுகள் பாய்ந்ததன் காரணமாக, சுக்லாவின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவர் உயிரிழந்தார்' என்று குர்கானில் சுக்லா அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையின் தலைவர் யதின் மெஹதா கூறினார்.
Advertisement
கடந்த 25-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் கட்சிக் கூட்டத்தை முடித்து கொண்டு திரும்பிய காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேரந்த 28 பேர் உயிரிழந்தனர், சுக்லா பலத்த காயமடைந்தார். ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவரது உடம்பில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் 26-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.
விடுதலைப் போராட்ட தியாகி ரவி சங்கர் சுக்லாவின் மகனான வி.சி. சுக்லா, 1957-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். ஒன்பது முறை மக்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையின்போது மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அரசில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவும், மத்திய நீர் வளத் துறை அமைச்சராகவும் சுக்லா பதவி வகித்துள்ளார்.