முகப்பு
இந்தியா

இலவச ரயில் சேவைக்கு ஏற்பாடு

கடும் மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மீட்புப் பணிக்கு ரயில்வே நிர்வாகமும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் இலவச ரயில் சேவை வழங்கப்படுகிறது.

Updated On : 22 ஜூன், 2013 at 1:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

கடும் மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மீட்புப் பணிக்கு ரயில்வே நிர்வாகமும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் இலவச ரயில் சேவை வழங்கப்படுகிறது.

சாலைகள், பாலங்கள் போன்றவை முற்றிலுமாக சேதமடைந்துவிட்டதால் பல பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலமாகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது.

எம்.ஐ.-17 பெரிய ரக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்கள், தண்ணீர், மருந்து ஆகியவை கொண்டுவரப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

Advertisement

ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை மீட்பதற்கு போதிய எண்ணிக்கையில் ஹெலிகாப்டர்கள் இல்லை.

மேலும் ஒரு ஹெலிகாப்டரில் 20 முதல் 25 பேர் மட்டுமே செல்ல முடிவதால் மீட்புப் பணியில் கால தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏர் இந்தியா சலுகை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏர் இந்தியா தனது விமான சேவையில் சலுகை அறிவித்துள்ளது.

டேராடூனிலிருந்து நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கு 50 சதவீத கட்டணச் சலுகையை ஏர் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் டேராடூனுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இலவச ரயில் சேவை: உத்தரகண்ட் மாநிலத்தின் ரயில் நிலையங்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. அனைவருக்கும் இலவச ரயில் சேவை வழங்கப்படுகிறது.

ஹரித்துவார் ரயில் நிலையத்திலிருந்து லக்னெü, மும்பை, செகந்திராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. வெள்ளப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக மேலும் அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் அனுப்பப்படவுள்ளன.

ஹெலிகாப்டர் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ருத்ரபிரயாக் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் முற்றிலுமாக சேதமடைந்தது.

செயற்கை பாலங்கள்: மீட்புப் பணியில் ராணுவத்தினர், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் உதவியாக இருப்பதாக யாத்ரிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலைகள், பாலங்கள் சேதமடைந்த பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும் சிக்கிய பலரை கயிறு கட்டி மீட்டு வருகின்றனர்.

மேலும் செயற்கையான மரப் பாலங்கள், கயிற்றால் ஆன பாலங்கள் போன்றவற்றை உருவாக்கி யாத்ரிகர்களையும் உள்ளூர் மக்களையும் மீட்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக யாத்திரைக் குழு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.