முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் 50 ஆயிரம் பேர் சிக்கித் தவிப்பு; 34 ஆயிரம் பேர் மீட்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல்வேறு பகுதிகளில் இன்னமும் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூன் 2013, 4:49 am IST
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல்வேறு பகுதிகளில் இன்னமும் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹரித்துவாரில் வெள்ளிக்கிழமை கங்கையில் மிதந்த 40 சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 556ஆக அதிகரித்துள்ளது. சாவு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.

ராணுவம் மட்டுமல்லாது, சஷஸ்த்ர சீமா பல், இந்திய-திபெத் எல்லை போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப்புற சாலை நிறுவனம் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 100, 101, 102, 108 உள்ளிட்ட அவசர சேவைகள் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் மீட்பு நடவடிக்கை மூலம் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளிலிருந்து மட்டும் 9,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஹரித்துவார் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ராஜீவ் ஸ்வரூப் கூறுகையில், ""ஹரித்துவாரில் கங்கை நதியில் மிதந்த 40 சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன'' என்றார்.

கண்காணிப்பு அதிகாரி நியமனம்: மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் உள்துறைச் செயலாளர் வி.கே.துகல் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்வார்'' என்றார் ஷிண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.