கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி: உத்தவ் தாக்கரேவுக்கு அளிக்க பாஜக முடிவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அளிக்க பா.ஜ.க. முன்வந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அளிக்க பா.ஜ.க. முன்வந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது அதன் ஒருங்கிணைப்பாளராக சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பின், அப்பொறுப்பை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் வகித்து வந்தார். இதனிடையே, பா.ஜ.க.வுடனான 17 ஆண்டு காலக் கூட்டணியை அக்கட்சி சமீபத்தில் முறித்துக்கொண்டது.
இந்தச் சூழ்நிலையில், தனது கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகளைத் தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக, பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை கடந்த செவ்வாய்க்கிழமை
Advertisement
Advertisement
சந்தித்துப் பேசினார்.
மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் "மாதோஸ்ரீ' இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை உத்தவுக்கு அளிக்க பா.ஜ.க. விரும்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அதற்கு, இந்தப் பதவியை ஏற்பது குறித்து பரிசீலிப்பதாகவும், விரைவில் தனது முடிவை அறிவிப்பதாகவும் உத்தவ் கூறியதாகத் தெரிகிறது. அவர் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில், தேசிய அரசியலில் நுழைய உத்தவுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் நினைக்கின்றனர். அது நடந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வரும் மூன்றாவது நபராக உத்தவ் இருப்பார்.
முன்னதாக, உத்தவ் தாக்கரேவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ""பா.ஜ.க.வின் மிகப் பழமையான தோழமைக் கட்சியான சிவசேனையுடன் எங்கள் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்'' என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே கூறுகையில், ""பா.ஜ.க. தனது ஹிந்துத்துவக் கொள்கையை விட்டு விலகாத வரை அந்தக் கட்சியுடனான எங்கள் கூட்டணி தொடரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதீஷ்குமார் விலகியுள்ளார். அவர் பேசுவது எந்த விதமான மதச்சார்பின்மை?
காஷ்மீரை விட்டு காஷ்மீர் பண்டிட்டுகள் துரத்தப்பட்டபோது இந்த மதச்சார்பின்மைவாதிகள் எங்கிருந்தார்கள்? ஹிந்துக்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தபோது இவர்கள் எங்கே போனார்கள்?'' என்றார்.