முகப்பு
இந்தியா

நிவாரணப் பணியில் அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது: காங்கிரஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூலை, 2013 at 1:40 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உரிய வகையில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் விமர்சனம் செய்திருந்தார். மாநில அரசை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ""உத்தரண்ட் அரசு செயல்பட்டு வரும் விதம் குறித்து காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்துள்ளது. வெள்ள பாதிப்பு நிலவரத்தை பாஜக அரசியலாக்கக் கூடாது. இந்த நெருக்கடியான நேரத்தில் மாநில அரசை விமர்சிக்கவும் கூடாது. மாறாக, மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசை ஆதரிக்க வேண்டும்'' என்றார். அஜய் மக்கான், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், ""உத்தரகண்டில் நிவாரணப் பணிகளில் உதவுவதற்குப் பதிலாக, இந்தப் பேரழிவை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ர்.

Advertisement

சுஷ்மா மீது மணீஷ் திவாரி குற்றச்சாட்டு: மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, திங்கள்கிழமை டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்தது:

சிபிஐ அமைப்புக்குத் தன்னாட்சி வழங்குவதற்கு மத்திய அரசு உருவாக்கியுள்ள திட்டம் குறித்து விமர்சிக்க நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜுக்கும், அருண் ஜேட்லிக்கும் மனமிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்குச் செல்வதற்கு மட்டும் நேரமில்லை. அவர்கள், அந்த மாநிலத்துக்குச் செல்வதையோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதையோ யாராவது பார்த்தார்களா? அவர்கள் சார்ந்துள்ள கட்சிதான் உத்தரகண்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் செல்வதை விமர்சிக்கிறார்கள்.

விஐபிக்கள் உத்தரகண்டுக்குச் சென்றால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியதாலேயே தாங்கள் அங்கு செல்லவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால், அந்த மாநிலத்துக்குச் சென்ற கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இது ஏன் பொருந்தவில்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் போலிருக்கிறது என்று மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சி.பி.ஐ. அமைப்புக்கு தன்னாட்சி வழங்குவது என்ற அமைச்சரவையின் முடிவு ஒரு மாயை என்றும் அரசின் இந்த ஏமாற்று வேலையை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.