முகப்பு
இந்தியா

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு: எஸ்ஸார், லூப் நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், தங்கள் நிறுவன அதிகாரிகள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

Updated On : 2 ஜூலை, 2013 at 1:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், தங்கள் நிறுவன அதிகாரிகள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக மேற்கண்ட 2 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தன.

Advertisement

இந்த வழக்கில் தங்கள் நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி) மற்றும் 120பி (குற்ற சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்கு உள்பட்டவை.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தப்படாத நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விசாரணை மேற்கொள்ளக் கூடாது என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை முடிந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

2ஜி ஊழல் வழக்கில் எஸ்ஸார் குழும நிறுவனர்கள் அன்ஷுமன் மற்றும் ரவி ரூயா, இக்குழுமத்தின் இயக்குநர் விகாஷ் சரப், லூப் டெலிகாம் நிறுவனர்கள் கிரண் கெய்தான் அவரது கணவர் ஐ.பி. கெய்தான் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, அவரது முன்னாள் செயலாளர் ஆர்.கே. சொந்தாலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, திமுக எம்பி கனிமொழி மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏஜி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.