அடுத்த இலக்கு மும்பை: இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை
தங்களின் அடுத்த இலக்கு மும்பைதான் என்று இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்) பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் அடுத்த இலக்கு மும்பைதான் என்று இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்) பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் புத்த கயையில் குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக (ஜூலை 5) டுவிட்டரில் இந்த எச்சரிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதில், எங்களின் அடுத்த இலக்கு மும்பை. முடிந்தால் எங்களை தடுத்துப் பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. புத்த கயையில் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் டுவிட்டரில் இந்தியன் முஜாஹிதீன் பெயரில், 9 குண்டு வெடிப்புகளை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டோம் என்று தகவல் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
இந்த மிரட்டலை அடுத்து, மகாராஷ்டிர அரசு மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதற்கட்ட மதிப்பீட்டின்படி,டுவிட்டரில் இந்தியன் முஜாஹிதீன் பெயரிலுள்ள அந்தக் கணக்கு உண்மையானதாக தெரியவில்லை என்று பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த விஷயத்தை மாநில அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் போலீஸார் அனைவரும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
டுவிட்டரில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் பற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்ட மும்பை காவல்துறை இணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சதானந்த் தட்டே,""நடப்பு நிலவரத்தை அனுசரித்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்,'' என்று கூறினார்.
பொது இடங்களில் சந்தேகப்படும்படியாக ஏதாவது பொருள் கிடந்தால் அதுபற்றி உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும், விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.