முகப்பு
இந்தியா

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: ஜூலை 15-க்கு தள்ளிவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளிவைத்தது.

Updated On : 12 ஜூலை, 2013 at 1:45 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளிவைத்தது.

இது தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதேந்தர் குமார், நிபுணர் உறுப்பினர் டி.கே. அகர்வால், ஜி.கே. பாண்டே, ஆர்.சி. திரிவேதி அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த மே 31-ஆம் தேதி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

ஆலை செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் சுப்பிரமணியம் பிரசாத், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் ஆஜராயினர். இவர்கள் அனைவரும் நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை தொடர்பாகக் கருத்து தெரிவிக்க அவகாசம் கோரினர்.

இதையடுத்து, ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம், "தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவின்படி ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தை வரும் ஜூலை 15-ஆம் தேதி துண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று முறையிட்டார்.

அதைக் கேட்ட நீதிபதி ஸ்வதேந்தர் குமார் பிறப்பித்த உத்தரவு:

"ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழு நடத்திய ஆய்வறிக்கையை தீர்ப்பாயம் பதிவு செய்து கொள்கிறது. இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அளித்த அறிக்கை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு ஆகியவை அடிப்படையில்தான் ஆலை நிர்வாகத்தின் மனு விசாரிக்கப்படுகிறது. வழக்கின் தன்மை அடிப்படையில் முடித்து வைக்கப்பட்ட முந்தைய விசாரணையின் வாதங்களை தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்யாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அதன்பேரில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.