அசாமில் சிகரெட் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க முடிவு
அசாம் சட்டப்பேரவையில் புகையிலை எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகைக்கும் பொருள்கள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் தடைவிதிக்க புதிய சட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் புகையிலை எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகைக்கும் பொருள்கள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் தடைவிதிக்க புதிய சட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் புகையிலை எதிர்ப்பு மசோதா (அசாம் சுகாதார சட்டம்-2013) சில மாற்றங்களுடன் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவானது புகையிலை மற்றும் நிகோட்டின் அடங்கிய ஜர்தா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யவும், வர்த்தகப்படுத்தவும், விளம்பரம் செய்யவும், இருப்பு வைக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும், நுகரவும் தடை விதிக்க வழிசெய்கிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா குவாஹாட்டியில் பத்திரிகையாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி வருமாறு: புகையிலை எதிர்ப்பு மசோதாவை அமல்படுத்துவதுதான் அரசின் முதல் குறிக்கோள் ஆகும். இதை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Advertisement
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, சிகரெட், பீடி உள்ளிட்ட புகைப் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். இது எப்போது கொண்டுவரப்படும் என்று கூற முடியாது. ஆனால் ஒருநாள் வந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டில் அமலில் உள்ள பொது இடத்தில் புகைப் பிடிப்பதை தடுக்கும் சட்டத்தில், அதன் பொறுப்பு நுகர்வோர் மீது விழுகிறது. ஆனால், இந்த சுகாதார சட்ட மசோதாவை பொருத்தவரை அதன் பொறுப்பு உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்படும்.
அசாமில் இந்த மசோதா நடைமுறைக்கு வந்த பிறகு, மற்ற மாநிலங்களுக்கும் இந்த மசோதாவை கொண்டுசெல்ல வலியுறுத்தப்படும் என்றார் சர்மா.