முகப்பு
இந்தியா

கேரள முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தள்ளுபடி

கேரள மாநில முன்னாள் அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 12:54 am IST
பகிர்:

கேரள மாநில முன்னாள் அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் ஜோஸ் தெட்டயில். இவர் மற்றும் இவரது மகனுக்கு எதிராக 30 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார்.

இதையடுத்து, இவர்களுக்கு எதிராக அலுவா போலீஸார் அண்மையில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் முதல் நபராக ஜோஸ் தெட்டயில் சேர்க்கப்பட்டார்.

Advertisement

Advertisement

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.வான தெட்டயில் உயர் நீதிமன்றத்தை அணுகி தனக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்.

தான் அளித்த மனுவில், பெண் அளித்த புகாரில் இந்திய குற்றவியல் சட்டம் 376-ஆவது பிரிவின் (பாலியல் பலாத்காரம்) கீழ் தண்டிக்க கூடிய குற்றச்சாட்டுகள் எதுவும் இடம்பெறவில்லை. அந்தப் பெண் அளித்த வாக்குமூலமும், குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.பவதாசன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சருக்கு எதிராக பெண் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஜோஸ் தெட்டயிலுக்கு எதிரான புகாரில் ஆதாரமில்லை. எனவே, தெட்டயிலுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட புகாரை தள்ளுபடி செய்கிறேன்.

ஏதோ குற்றத்துக்காக யார் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக எந்த வழக்கிலும் விசாரணை நீண்டுகொண்டே போகிறது. முடிவதே இல்லை என்று நீதிபதி கூறினார்.

அவர் அளித்த தீர்ப்பில், புகார் முழுவதையும் படித்துப் பார்த்ததில் பாலியல் பலாத்கார குற்றத்தின் கீழ் வரக் கூடிய குற்றச்சாட்டுகள் எதையும் காணவில்லை என நீதிபதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.